Thursday, March 15, 2012

நல்ல தமிழ் எழுதுவோம்- தொடர்-4

ஒன்றும் பலவும் (தொடர்)

வெகுவாகக் காணப்படும் எழுத்துப் பிழைகளுள் குறிப்பிடத் தக்கவை, மறுப்புச் சொற்களாகும்.  நாள், வார, மாத இதழ்களிலும் இணையக் கட்டுரைகளிலும் நம் கண்களை உறுத்தும் பிழைகள் இந்த மறுப்புச் சொற்களில் ஏராளம் என்றால் மிகையாகாது.  சற்றே ஊன்றிப் படியுங்கள்.


அன்று – அல்ல – அல்லன் – அல்லர்:

ஒருமை, பன்மை வேறுபாடுகளுக்குத் தகுந்தவாறு இச்சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது, தமிழ் இலக்கண வரம்பாகும்.  மாறுபாடான தன்மையைச் சுட்டிக் காட்டி மறுத்துரைப்பதற்காக, “இது சரியல்ல” என்றோ, “இது சரியில்லை” என்று எழுதுவது தவறில்லாதது போன்று தெரிகிறது.  ஆனால், தவறு!  எப்படி?

‘இது’ என்பது ஒருமையாகும்.  ‘அல்ல’ என்பது, பன்மையின் மறுப்புச் சொல்லாகும்.  ஒருமையும் பன்மையும் ஒன்றுபடுமா?  எனவே, ‘இது சரியன்று’ என எழுதுதலே சரியாகும் என்பதை அறிக!  ‘அன்று’ என்ற ஒருமை மறுப்புச் சொல்லின் பன்மையே ‘அல்ல’ என்பதாகும்.  இவ்வாறு தவறின்றி எழுதும் பழக்கம் கைவரப் பெறுவது எவ்வாறு?  எழுதிச் செல்லும்போது ஒருமை-பன்மை மீது சற்றே கவனம் வைத்தால் போதும்.  அவ்வளவுதான்.

ஒருவர், “நான் குற்றவாளியில்லை” என்று எழுதினார்.  ஆனால், அவர் தவறிழைத்தவர்!  எதில்?  எழுத்தில்.  ‘அல்ல’, ‘இல்லை’ என்ற சொற்களை ஒருமையுடன் இணைத்து எழுதிய குற்றவாளி ஆகிவிட்டார்!  “நான் குற்றவாளி அல்லன்” என்றே எழுதியிருக்க வேண்டும்.

இது போன்றே, “அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்லர்” என்று எழுதுவதற்குப் பகரமாக, “அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல” என்று எழுதக் கூடாது.  ‘அல்லன்’ என்ற ஒருமையின் பன்மை ‘அல்லர்’ என்பதாகும்.  இவை உயர்தினைக்கே வரும்.  அஃறிணையுடன் வரும் மறுப்புச் சொல் ‘அல்ல’ என்பதாகும்.  “காரணங்கள் அவையல்ல” என்பது போன்று எழுதுதல் வேண்டும்.  

சில – பல – சிலர் – பலர்:  

இவையனைத்தும் பன்மைகளாகும்.  ஆனால், இவை சுட்டும் திணைக்குத் தக்கவாறு மாறுபட்டுப் பயன்படுத்தப்படும்.  ‘சில’ என்பதும் ‘பல’ என்பதும் அஃறிணைக்கே சார்பாக வரும்.  “சில நண்பர்கள்” என்றோ, “பல மக்கள்” என்றோ எழுதுவது தவறாகும்.  இவற்றை, “நண்பர்கள்” என்று மட்டுமோ, “மக்கள்” என்று மட்டுமோ எழுதலாம்.  அல்லது, “நண்பர்கள் பலர்” என்று, அல்லது “மக்கள் பலர்” என்றும் எழுதலாம்.

உண்டு:

பலர் இச்சொல்லை உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாகப் பயன்படுத்துகின்றனர்!  ‘இருக்கின்றது’ என்பதற்கு இணையான மற்றொரு சொல், ‘உண்டு’ என்பதாகும்.  இதனை உயர்திணைக்குப்  பயன்படுத்துவது, பெருந்தவறாகும்.  “ஆடு உண்டு”, “மாடு உண்டு” என்று சொன்னால் தவறில்லை.  “மனிதன் உண்டு” என்று சொன்னால்....?  தவறுதானே?  “மனிதன் உள்ளான்” அல்லது, “மனிதர் உள்ளார்” அல்லது, “மனிதன் இருக்கின்றான்” என்று எழுதுதலே முறையாகும்.      


(திருத்தங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)    

- அதிரை அஹ்மது

நல்ல தமிழ் எழுதுவோம் - தெர்டர்-3

இன்று பத்திரிகைகளிலும் பதிப்பிக்கும் நூல்களிலும் இணையத்திலும் எழுதும் பலர் ஒருமை பன்மையில் தம் கவனத்தைச் செலுத்தாமல் இருப்பதை நாம் காண முடிகின்றது!  கருத்துகளும் தவறின்றி இருக்கவேண்டும்;  அவற்றை எடுத்துரைக்கும் மொழியும் இலக்கணப் பிழையின்றி அமையவேண்டும் என்ற அக்கரையுடன்தான் நாம் இவ்வாறு கூறுகின்றோம்.  அல்லாமல், நமக்கு யாருடனும் காழ்ப்புணர்வோ, பொறாமையோ கிடையாது.  இவ்வடிப்படையில் இத்தொடரை இங்கு நோக்கக் கோருகின்றோம்.

'ஒரு' என்பது ஒருமைக்குப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.  சிலர் ஒருமையில் தொடங்கிப் பன்மையில் முடிப்பதை அவ்வப்போது பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் வலைத் தளங்களிலும் காண்கிறோம்!  ஒருமையில் தொடங்கி, ஒருமையில் முடிப்பதுதான் முறையாகும்.  'ஒரு' என்பது, தனிமையான ஒன்றுக்கும் வரும்;  கூட்டான ஒன்றுக்கும் வரும்.  'ஒரு குடும்பம்', ஒரு கூட்டம்', 'ஒரு சமுதாயம்' என்றெல்லாம் எழுதுவதில் தவறில்லை.  இவற்றைப் பன்மை என நினைத்துக்கொண்டு, 'ஒரு கூட்டம் கூடிவிட்டனர்' என்று எழுதுவது தவறாகும்.  

'ஒரு' என்பது அஃறிணையுடன் இணைந்து பயன்படுத்தப்படுவதும் முறையாகும்.  'ஒரு வீடு', ஒரு பள்ளிவாசல்', 'ஒரு புத்தகம்', 'ஒரு நாள்', 'ஒரு மரம்', 'ஒரு கடை' என்றெல்லாம் எழுதுவதே சரியாகும்.  இந்த 'ஒரு' என்பதை உயர்திணைக்குப் பயன்படுத்தக் கூடாது.  அதாவது, 'ஒரு மனிதன்', 'ஒரு தந்தை', 'ஒரு தம்பி', 'ஒரு தங்கை', 'ஒரு நபி', 'ஒரு தூதர்' என்றெல்லாம் பயன்படுத்துவது கூடாது.  அவ்வாறாயின், இவற்றைத் தவறின்றி எழுதுவது எப்படி?

'ஒரு' என்பதைச் சேர்க்காமல், 'மனிதன்', 'தந்தை', 'தம்பி', 'தங்கை', 'நபி', 'தூதர்' என்று ஒருமையில் எழுதலாம்.  அல்லது, ஒருமையைச் சுட்டித்தான் ஆகவேண்டுமெனில்,  'மனிதன் ஒருவன்', 'தந்தை ஒருவர்', 'தம்பி ஒருவன்', 'தங்கை ஒருத்தி', 'நபி ஒருவர்', 'தூதர் ஒருவர்' என்பன போன்றும் எழுதலாம்.  இன்று மிகப் பெரிய கவிஞர் என்று சமுதாயத்தாரால் மதிக்கப்படும் முனைவர் ஒருவர் ஒரு நூலுக்கு மதிப்புரை எழுதியபோது, 'ஒரு கவிஞர்' என்று எழுதி, என்னை வியப்பில் ஆழ்த்தினார்!  இன்று பரவலாக எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் 'ஒரு நபி' என்றும், 'ஒரு இறைவன்' என்றும், 'ஓர் வேதம்' என்றும், 'ஒரு நண்பன்' என்றும், 'ஒரு தாய்' என்றும் பிழையாக எழுதிவருவதை அன்றாடம் காண முடிகின்றது!  

இத்தொடர்பில் இன்னொன்றையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.  அதாவது, 'ஒரு' அல்லது 'ஓர்' எனும் சொற்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது பலருக்குத் தெரியவில்லை!  இவ்விரண்டு சொற்களும் ஒரே கருத்தைச் சுட்டுவனவே.  எனினும், இவற்றை முறையாக, தவறின்றிப் பயன்படுத்தவேண்டும் அல்லவா?

ஒருமையினை அடுத்து வரும் சொல்லின் முதலெழுத்து உயிரெழுத்தாயின், 'ஒரு' என்பது 'ஓர்' என்று மாறுபடும்.  எடுத்துக்காட்டாக, 'ஓர் உயிர்', ஓர் ஆடு', ஓர் எழுத்து', 'ஓர் ஒளி', 'ஓர் ஆசை' என்பன போன்று.  இவற்றை 'ஒரு உயிர்' என்றோ, 'ஒரு ஆடு' என்றோ, 'ஒரு எழுத்து' என்றோ, 'ஒரு ஒளி' என்றோ, 'ஒரு ஆசை' என்றோ எழுதுவது மொழிப் பிழையாகும்.

சிலர் 'ஓர்' என்பது, எழுத்து நடைக்கு அணி சேர்க்கும் என்று நினைத்துக்கொண்டு, 'ஓர் நாள்', 'ஓர் கருத்து', 'ஓர் காலம்' என்றெல்லாம் எழுதுகின்றனர்!  தவறு.  

ஆனால், 'ஓர்' என்பதற்கு, 'ஒப்பற்ற' என்ற பொருளும் அகராதியில் உண்டு.  அக்கருத்தில் 'ஓர்' என்பதை மாற்றி எழுதுவதில் தவறில்லை.  இதில் இன்னொரு விதிவிலக்கு, மரபுப்பா எழுதிய புலவர்களுக்குண்டு.  இது, அவர்களுக்கு இலக்கண நூல்கள் வழங்கிய உரிமையாகும்.  நாமெல்லாரும் அத்தகைய கவி வல்லார் அல்லரே?
-----------------------------
அதிரை அஹமது


Tuesday, March 13, 2012

நல்ல தமிழ் எழுதுவோம்! தொடர்-2

எனது – உனது – நமது:

எனது, உனது, நமது எனும் சொற்களெல்லாம் என்+அது, உன்+அது, நம்+அது என்று பிரிவுபடும். இவற்றில் ‘அது’ என்பது அஃறிணை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதை வைத்து, உயர்திணையுடன் சேர்ப்பது சாலுமோ? கூடாது. எனவே, ‘எனது தம்பி, உனது தந்தை, நமது நாயகம்’ என்றெல்லாம் எழுதுதல் பிழையாகும் என்பதை இலகுவில் தெரிந்துகொள்க.

அவ்வாறாயின், இவற்றைப் பிழையின்றி எழுதுவது எப்படி? ‘என் தம்பி, உன் தந்தை, நம் நாயகம்’ என்றே எழுத வேண்டும். ஆகவே, எனது, உனது, நமது என்ற சொற்களுக்குப் பின் வரும் சொற்கள் உயர்திணையாக இருக்கக் கூடாது என்பது தெளிவு. ‘எனது புத்தகம், உனது வீடு, நமது ஊர்’ என்பன போன்று அஃறிணையாகவே இருக்க வேண்டும்.

மேலும், ‘அது’ என்பது ஒருமைச் சொல் என்பது நமக்கெல்லாம் தெரியும்தானே? அதனை அடுத்த சொல் பன்மையாக இருக்கலாமா? கூடாது. அதாவது, ‘எனது புத்தகம்’ என்று வரலாம். ஆனால், ‘எனது புத்தகங்கள்’ ‘உனது வீடுகள்’, ‘நமது ஊர்கள்’ என்றெல்லாம் எழுதுவது பிழை. இவற்றிலும் ‘என்’ என்பதை மட்டுமே பயன் படுத்த வேண்டும். அல்லது, ‘உடைய’ என்ற சொல்லைப் பயன் படுத்தலாம். ‘என்னுடைய புத்தகம்’ அல்லது, ‘என்னுடைய புத்தகங்கள்’ என்று பயன்படுத்தலாம்; தவறில்லை.

தான் – தாம் :

‘தான்’ என்பது ஒருமையாகும். ‘தாம்’ என்பதோ பன்மையாகும். இவ்விரண்டையும் எழுதும்போது, ‘நான்தான், அவன்தான், நீதான்’ என்று ஒருமையிலும், ‘அவர்கள்தாம், நாங்கள்தாம், நீங்கள்தாம்’ என்று பன்மையிலும் எழுத வேண்டும். அவ்வாறின்றி, ‘அவர்கள்தான், நாங்கள்தான், நீங்கள்தான்’ என்றெல்லாம் எழுதுதல் பிழையாகும்.

ஆனால், மரியாதையாகக் குறிப்பிடும்போது மட்டும் இவை மாறி வரும். எடுத்துக்காட்டாக: ‘நபியவர்கள்தாம்’ என்பது போன்று.

அதே வேளை, ‘தான்’ அல்லது ‘தாம்’ என்ற அசைச் சொற்களை அவற்றுக்கு முந்திய பெயர்களை விட்டுப் பிரித்து, ‘அவர் தான்’ என்று அல்லது, ‘அவர்கள் தாம்’ என்று எழுதினால் பொருள் மாறுபடுவதை ஆழ்ந்து சிந்தித்தால் அறிந்துகொள்ள முடியும். ‘அவர் தான் சொன்னதை மாற்றிக் கொண்டார்’ என்றோ, ‘அவர்கள் தாம் செய்ததைத் தவறென்று ஏற்றுக்கொண்டார்கள்’ என்றோ எழுதும்போது மெல்லியதாகக் கருத்து மாறுபடுவதைக் காண முடியும்.

அவைகள்:

ஒரு பொருளைப் பற்றிக் குறிப்பிட, ‘அது’ என்கிறோம். அப்பொருளே பலவாக இருந்தால், ‘அவை’ என்போம். இப்பன்மையைப் பலர், ‘அவைகள்’ என்று எழுதுகின்றனர்! இது தவறு. ஏனெனில், பன்மையுடன் இன்னொரு பன்மையா? தேவையில்லை. “அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் எண்ணத் தொடங்கினால், அவைகளை அவர்கள் எண்ண முடியாது” என்ற இறைமறை வசனத்தில் உள்ள ‘அவைகளை’ என்பது ‘அவற்றை’ என்றுதான் அமைய வேண்டும்.

அது, அவை:

‘அது’ என்பது ஒருமைக்கும், ‘அவை’ என்பது பன்மைக்கும் பயன்படுத்தப்படும். ஆனால், எழுத்தாளர்கள், எழுதிச் செல்லும் போக்கில், எதை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்துவிட்டு, முன்னுக்குப் பின் முரணாக எழுதுகின்றனர்! ‘அது....யாவை?’ அல்லது, ‘அவை....என்ன?’ என மாறுபாடாக எழுதுகின்றனர். ‘அது என்ன?’ என்றும், ‘அவை யாவை?’ என்பவையே சரியாகும். “மறுமையின் அடையாளங்கள் என்ன?” என்று பள்ளிப் பாட நூல் ஒன்றில் பதிவாகி இருந்தது! ‘அடையாளங்கள்’ எனும் சொல் பன்மையாகும். எனவே, அதைத் தொடர்ந்து வரும் சொல்லும் ‘யாவை?’ என்றோ, ‘எவை?’ என்றோ, பன்மையாகத்தான் வரவேண்டும்.

எழுத்தாளர்களே! செய்தியாளர்களே! கவிஞர்களே! உங்கள் எழுத்துகளில், இங்கு நான் சுட்டிக் காட்டிய பிழைகள் இருக்கின்றனவா என்று திரும்பிப் பாருங்கள். இருந்தால், திருந்துங்கள்! திருத்துங்கள்! 
 --------------------
அதிரை அஹமது

நல்ல தமிழ் எழுதுவோம்!- தொடர் 1


உயர்வான இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றிய கருத்துகள் சிறப்பான – பிழையில்லாத தமிழ் நடையில் எழுதப்பட்டு வந்தால், நல்ல இலக்கியங்கள் உருவாகும். (இதற்கோர் எடுத்துக்காட்டு, அண்மையில் வெளிவந்த ‘தோழர்கள்’ எனும் நூல்.) அவற்றைக் கொண்டு ‘த அவா’ செய்தால் நிறைந்த பலனைக் காணலாம் என்பது எனது கருத்து.  இதன் விளைவாக உருவானதே இக்கட்டுரைத் தொடர்.
எழுத்தாளர்களுக்குச் சுட்டிக் காட்டித் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிழைகள் ஏராளம் உள்ளன.  அவற்றுள், என் பார்வையில் பட்ட சிலவற்றை மட்டும் தொகுத்துரைக்க முயல்கின்றேன்.  இத்தொடரில் சுட்டிக் காட்டப்பெறும் எழுத்து, சொல், கருத்துப் பிழைகள் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், தமிழ்ப் புலமையாளர்கள் சிலரின் எழுத்தோவியங்களிலும் இடம்பெற்றிருக்கக் கூடும்!  தக்க சான்றுகளுடன் அவற்றையும் சுட்டிக் காட்டுவேன்.  திருத்திக்கொள்வது நன்று.  வாசகர்களின் கருத்துகள் வரவேற்கத் தக்கவை. 
அல்லாஹ் அவர்களை (!):  ‘அல்லாஹ்’வை அவன் என்று ஒருமையில்தான் அழைக்க வேண்டும்.  அல்லாஹ்வுக்குப் பிறகு பன்மைச் சொல் வந்தால் பொருள் மயக்கம் வர வாய்ப்புண்டு.  எ.கா: ‘அல்லாஹ் அவர்களை மன்னிக்க வேண்டும்’ என்ற சொற்றொடரில் பொருள் மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதை முறையாக எப்படி மாற்றி எழுத வேண்டும்?  ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும்’ என்று மாற்றி எழுதினால் பொருள் மயக்கம் தவிர்க்கப்படும்.  அல்லது, அல்லாஹ் என்ற சொல்லுக்குப் பின்னால் ஒரு காற்புள்ளியை (கமாவை) இட்டுவிட்டாலும் பொருள் மயக்கம் தவிர்க்கப்படும். 
நபிகளார்:   ‘நபிகள் நாயகம்’ என்பது, நபிகள் அனைவருக்கும் நாயகம் (தலைவர்) அல்லது நபிகளின் நாயகம் ஆனவர் என்ற பொருளில் ஆளப்படும் சொற்றொடர் ஆகும்.  இதில் உள்ள ‘கள்’ பன்மை விகுதியை இன்று பலர் (நபிகளார் என்று) ஒருமையிலேயே பயன்படுத்துகின்றனர்!  ‘நபியார்’ என்று மட்டும் குறிப்பிட்டால் போதும்.  அதை விடுத்து, ‘நபிகளார்’ என்று எழுதுவது  தவறு.  அதற்குப் பகரமாக, ‘நபியவர்கள்’ என்று எழுதலாம்.  
------------------------
அதிரை அஹமது
நன்றி-அதிரை எக்ஸ் பிரஸ்