இன்று பத்திரிகைகளிலும் பதிப்பிக்கும் நூல்களிலும் இணையத்திலும் எழுதும் பலர் ஒருமை பன்மையில் தம் கவனத்தைச் செலுத்தாமல் இருப்பதை நாம் காண முடிகின்றது! கருத்துகளும் தவறின்றி இருக்கவேண்டும்; அவற்றை எடுத்துரைக்கும் மொழியும் இலக்கணப் பிழையின்றி அமையவேண்டும் என்ற அக்கரையுடன்தான் நாம் இவ்வாறு கூறுகின்றோம். அல்லாமல், நமக்கு யாருடனும் காழ்ப்புணர்வோ, பொறாமையோ கிடையாது. இவ்வடிப்படையில் இத்தொடரை இங்கு நோக்கக் கோருகின்றோம்.
'ஒரு' என்பது ஒருமைக்குப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். சிலர் ஒருமையில் தொடங்கிப் பன்மையில் முடிப்பதை அவ்வப்போது பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் வலைத் தளங்களிலும் காண்கிறோம்! ஒருமையில் தொடங்கி, ஒருமையில் முடிப்பதுதான் முறையாகும். 'ஒரு' என்பது, தனிமையான ஒன்றுக்கும் வரும்; கூட்டான ஒன்றுக்கும் வரும். 'ஒரு குடும்பம்', ஒரு கூட்டம்', 'ஒரு சமுதாயம்' என்றெல்லாம் எழுதுவதில் தவறில்லை. இவற்றைப் பன்மை என நினைத்துக்கொண்டு, 'ஒரு கூட்டம் கூடிவிட்டனர்' என்று எழுதுவது தவறாகும்.
'ஒரு' என்பது அஃறிணையுடன் இணைந்து பயன்படுத்தப்படுவதும் முறையாகும். 'ஒரு வீடு', ஒரு பள்ளிவாசல்', 'ஒரு புத்தகம்', 'ஒரு நாள்', 'ஒரு மரம்', 'ஒரு கடை' என்றெல்லாம் எழுதுவதே சரியாகும். இந்த 'ஒரு' என்பதை உயர்திணைக்குப் பயன்படுத்தக் கூடாது. அதாவது, 'ஒரு மனிதன்', 'ஒரு தந்தை', 'ஒரு தம்பி', 'ஒரு தங்கை', 'ஒரு நபி', 'ஒரு தூதர்' என்றெல்லாம் பயன்படுத்துவது கூடாது. அவ்வாறாயின், இவற்றைத் தவறின்றி எழுதுவது எப்படி?
'ஒரு' என்பதைச் சேர்க்காமல், 'மனிதன்', 'தந்தை', 'தம்பி', 'தங்கை', 'நபி', 'தூதர்' என்று ஒருமையில் எழுதலாம். அல்லது, ஒருமையைச் சுட்டித்தான் ஆகவேண்டுமெனில், 'மனிதன் ஒருவன்', 'தந்தை ஒருவர்', 'தம்பி ஒருவன்', 'தங்கை ஒருத்தி', 'நபி ஒருவர்', 'தூதர் ஒருவர்' என்பன போன்றும் எழுதலாம். இன்று மிகப் பெரிய கவிஞர் என்று சமுதாயத்தாரால் மதிக்கப்படும் முனைவர் ஒருவர் ஒரு நூலுக்கு மதிப்புரை எழுதியபோது, 'ஒரு கவிஞர்' என்று எழுதி, என்னை வியப்பில் ஆழ்த்தினார்! இன்று பரவலாக எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் 'ஒரு நபி' என்றும், 'ஒரு இறைவன்' என்றும், 'ஓர் வேதம்' என்றும், 'ஒரு நண்பன்' என்றும், 'ஒரு தாய்' என்றும் பிழையாக எழுதிவருவதை அன்றாடம் காண முடிகின்றது!
இத்தொடர்பில் இன்னொன்றையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அதாவது, 'ஒரு' அல்லது 'ஓர்' எனும் சொற்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது பலருக்குத் தெரியவில்லை! இவ்விரண்டு சொற்களும் ஒரே கருத்தைச் சுட்டுவனவே. எனினும், இவற்றை முறையாக, தவறின்றிப் பயன்படுத்தவேண்டும் அல்லவா?
ஒருமையினை அடுத்து வரும் சொல்லின் முதலெழுத்து உயிரெழுத்தாயின், 'ஒரு' என்பது 'ஓர்' என்று மாறுபடும். எடுத்துக்காட்டாக, 'ஓர் உயிர்', ஓர் ஆடு', ஓர் எழுத்து', 'ஓர் ஒளி', 'ஓர் ஆசை' என்பன போன்று. இவற்றை 'ஒரு உயிர்' என்றோ, 'ஒரு ஆடு' என்றோ, 'ஒரு எழுத்து' என்றோ, 'ஒரு ஒளி' என்றோ, 'ஒரு ஆசை' என்றோ எழுதுவது மொழிப் பிழையாகும்.
சிலர் 'ஓர்' என்பது, எழுத்து நடைக்கு அணி சேர்க்கும் என்று நினைத்துக்கொண்டு, 'ஓர் நாள்', 'ஓர் கருத்து', 'ஓர் காலம்' என்றெல்லாம் எழுதுகின்றனர்! தவறு.
ஆனால், 'ஓர்' என்பதற்கு, 'ஒப்பற்ற' என்ற பொருளும் அகராதியில் உண்டு. அக்கருத்தில் 'ஓர்' என்பதை மாற்றி எழுதுவதில் தவறில்லை. இதில் இன்னொரு விதிவிலக்கு, மரபுப்பா எழுதிய புலவர்களுக்குண்டு. இது, அவர்களுக்கு இலக்கண நூல்கள் வழங்கிய உரிமையாகும். நாமெல்லாரும் அத்தகைய கவி வல்லார் அல்லரே?
-----------------------------
அதிரை அஹமது
நன்றி- அதிரை எக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment