Tuesday, March 13, 2012

நல்ல தமிழ் எழுதுவோம்! தொடர்-2

எனது – உனது – நமது:

எனது, உனது, நமது எனும் சொற்களெல்லாம் என்+அது, உன்+அது, நம்+அது என்று பிரிவுபடும். இவற்றில் ‘அது’ என்பது அஃறிணை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதை வைத்து, உயர்திணையுடன் சேர்ப்பது சாலுமோ? கூடாது. எனவே, ‘எனது தம்பி, உனது தந்தை, நமது நாயகம்’ என்றெல்லாம் எழுதுதல் பிழையாகும் என்பதை இலகுவில் தெரிந்துகொள்க.

அவ்வாறாயின், இவற்றைப் பிழையின்றி எழுதுவது எப்படி? ‘என் தம்பி, உன் தந்தை, நம் நாயகம்’ என்றே எழுத வேண்டும். ஆகவே, எனது, உனது, நமது என்ற சொற்களுக்குப் பின் வரும் சொற்கள் உயர்திணையாக இருக்கக் கூடாது என்பது தெளிவு. ‘எனது புத்தகம், உனது வீடு, நமது ஊர்’ என்பன போன்று அஃறிணையாகவே இருக்க வேண்டும்.

மேலும், ‘அது’ என்பது ஒருமைச் சொல் என்பது நமக்கெல்லாம் தெரியும்தானே? அதனை அடுத்த சொல் பன்மையாக இருக்கலாமா? கூடாது. அதாவது, ‘எனது புத்தகம்’ என்று வரலாம். ஆனால், ‘எனது புத்தகங்கள்’ ‘உனது வீடுகள்’, ‘நமது ஊர்கள்’ என்றெல்லாம் எழுதுவது பிழை. இவற்றிலும் ‘என்’ என்பதை மட்டுமே பயன் படுத்த வேண்டும். அல்லது, ‘உடைய’ என்ற சொல்லைப் பயன் படுத்தலாம். ‘என்னுடைய புத்தகம்’ அல்லது, ‘என்னுடைய புத்தகங்கள்’ என்று பயன்படுத்தலாம்; தவறில்லை.

தான் – தாம் :

‘தான்’ என்பது ஒருமையாகும். ‘தாம்’ என்பதோ பன்மையாகும். இவ்விரண்டையும் எழுதும்போது, ‘நான்தான், அவன்தான், நீதான்’ என்று ஒருமையிலும், ‘அவர்கள்தாம், நாங்கள்தாம், நீங்கள்தாம்’ என்று பன்மையிலும் எழுத வேண்டும். அவ்வாறின்றி, ‘அவர்கள்தான், நாங்கள்தான், நீங்கள்தான்’ என்றெல்லாம் எழுதுதல் பிழையாகும்.

ஆனால், மரியாதையாகக் குறிப்பிடும்போது மட்டும் இவை மாறி வரும். எடுத்துக்காட்டாக: ‘நபியவர்கள்தாம்’ என்பது போன்று.

அதே வேளை, ‘தான்’ அல்லது ‘தாம்’ என்ற அசைச் சொற்களை அவற்றுக்கு முந்திய பெயர்களை விட்டுப் பிரித்து, ‘அவர் தான்’ என்று அல்லது, ‘அவர்கள் தாம்’ என்று எழுதினால் பொருள் மாறுபடுவதை ஆழ்ந்து சிந்தித்தால் அறிந்துகொள்ள முடியும். ‘அவர் தான் சொன்னதை மாற்றிக் கொண்டார்’ என்றோ, ‘அவர்கள் தாம் செய்ததைத் தவறென்று ஏற்றுக்கொண்டார்கள்’ என்றோ எழுதும்போது மெல்லியதாகக் கருத்து மாறுபடுவதைக் காண முடியும்.

அவைகள்:

ஒரு பொருளைப் பற்றிக் குறிப்பிட, ‘அது’ என்கிறோம். அப்பொருளே பலவாக இருந்தால், ‘அவை’ என்போம். இப்பன்மையைப் பலர், ‘அவைகள்’ என்று எழுதுகின்றனர்! இது தவறு. ஏனெனில், பன்மையுடன் இன்னொரு பன்மையா? தேவையில்லை. “அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் எண்ணத் தொடங்கினால், அவைகளை அவர்கள் எண்ண முடியாது” என்ற இறைமறை வசனத்தில் உள்ள ‘அவைகளை’ என்பது ‘அவற்றை’ என்றுதான் அமைய வேண்டும்.

அது, அவை:

‘அது’ என்பது ஒருமைக்கும், ‘அவை’ என்பது பன்மைக்கும் பயன்படுத்தப்படும். ஆனால், எழுத்தாளர்கள், எழுதிச் செல்லும் போக்கில், எதை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்துவிட்டு, முன்னுக்குப் பின் முரணாக எழுதுகின்றனர்! ‘அது....யாவை?’ அல்லது, ‘அவை....என்ன?’ என மாறுபாடாக எழுதுகின்றனர். ‘அது என்ன?’ என்றும், ‘அவை யாவை?’ என்பவையே சரியாகும். “மறுமையின் அடையாளங்கள் என்ன?” என்று பள்ளிப் பாட நூல் ஒன்றில் பதிவாகி இருந்தது! ‘அடையாளங்கள்’ எனும் சொல் பன்மையாகும். எனவே, அதைத் தொடர்ந்து வரும் சொல்லும் ‘யாவை?’ என்றோ, ‘எவை?’ என்றோ, பன்மையாகத்தான் வரவேண்டும்.

எழுத்தாளர்களே! செய்தியாளர்களே! கவிஞர்களே! உங்கள் எழுத்துகளில், இங்கு நான் சுட்டிக் காட்டிய பிழைகள் இருக்கின்றனவா என்று திரும்பிப் பாருங்கள். இருந்தால், திருந்துங்கள்! திருத்துங்கள்! 
 --------------------
அதிரை அஹமது

No comments:

Post a Comment