Monday, April 9, 2012

நல்ல தமிழ் எழுதுவோம்- தொடர்-6

வேலூர் 'பாகியாத்துஸ் சாலிஹாத்' அரபிக் கல்லூரியில் 1972 ஆம் ஆண்டில், மார்க்கக் கல்வி பயின்றுகொண்டிருந்த மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசானாக நான் பணியமர்வு பெற்றிருந்த காலம் அது. தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் கற்பிப்பது எவ்வாறு என்று சிந்தித்த என் தேடலுக்கு, பேரா. அ.கி. பரந்தாமனாரின் 'நல்ல தமிழ் எழுதவேண்டுமா?' எனும் நூல் கிடைத்தது.  அதனையே 'பாட நூலாக' வைத்துப் பயிற்றுவிக்கத் தொடங்கினேன்.  சில அடிப்படை இலக்கணங்களைக் கற்றுக்கொடுத்துவிட்டு, பிழைகளின்றி உரைநடை எழுத அவர்களைப் பயிற்றுவிப்பான் வேண்டி, அதிலிருந்த 'சேர்த்து வைத்த குப்பை', விட்டுவிட்ட குப்பை', செல்லாத காசுகள்' ஆகிய நூல் பிரிவுகளை விரிவாகப் பாடம் நடத்தினேன்.  மாஷா அல்லாஹ்!  அவர்களுள் சிலர் இன்று தேர்ந்த எழுத்தாளர்களாகத் திகழ்வதைக் கண்டு உள்ளம் பூரிப்படைகின்றது.

பல்லாண்டுகள் கழித்து, இத்துறையில் தொடராகக் கட்டுரை எழுதத் துணிந்தபோது, புலவர், முனைவர் மா. நன்னன் அவர்கள், அன்றாடம் பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் சொற்பிழைகளைச் சுட்டிக் காட்டித் தனி நூல்கள் பலவற்றை எழுதியிருப்பது என் பார்வைக்கு வந்தது.  அந்த நூல்களும் இந்தத் தொடரை எழுதப் பெரிதும் உதவியாக இருந்தன.  இனி, பிழைகளுக்குள் நுழைந்து, திருத்தம் காண்போம்.....

நூல்கள் / நூற்கள்:  'நூல்' என்பது புத்தகம், ஏடு எனப் பொருள்படும்.  இதனைப் பன்மையாக எழுதும்போது, 'நூல்கள்' என்றுதான் எழுதவேண்டும்.  ஆனால், நம்மில் பலர் - அல்ல, பல்லாயிரக் கணக்கானோர் - 'நூற்கள்' என்று தவறாக எழுதுகின்றனர்!  இத்தவற்றைச் சுட்டிக்காட்ட, ஓர் எளிய எடுத்துக்காட்டைச் சொல்லலாம்.  'கால்' என்பதன் பன்மை, 'கால்கள்' ஆகும்.  அவ்வாறின்றி, 'காற்கள்' என்றா எழுதுகின்றோம்?  இல்லையே!

உடைமை / உடமை:  ஒன்றைப் பெற்றிருப்பதற்கு, 'உடைமை' என்ற சொல் முறையாகப் பயன்படுத்தப்படவேண்டும்.  இதனை 'உடமை' என்று எழுதக் கூடாது.  இது போன்ற ஒரு சொல்தான் 'தலைமை' என்பதும்.  இதனையும் 'தலமை' என்று எழுதக் கூடாது.  ஆனால், 'வழமை' என்பதை, 'வழக்கம்' அல்லது 'வழமை' என்றுதான் எழுதவேண்டும்.  மாறாக, 'வழைமை' என்று எழுதக் கூடாது.  பழையனவற்றைப் 'பழமை' என்றுதான் எழுதவேண்டும்;  'பழைமை' என எழுதக் கூடாது.

ஏமாற்றம்:  ஒருவர் ஏமாற்றம் அடைந்ததை, 'ஏமாந்தார்' என்று மிகப் பலர் எழுதுகின்றனர்.  தவறு!  ஏனெனில், 'ஏமாந்தார்' என்பதில் 'ஏமாப்பு' (இறுமாப்பு), 'ஏமாந்து' (இன்பமுற்று), 'ஏமாந்த' (அவாவுற்ற) என்ற வேறு பொருள் தரும் வினைகள் மறைந்துள்ளன.  எனவே,  'ஏமாற்றமடைந்தார்', அல்லது 'ஏமாறிப் போனார்', அல்லது 'ஏமாறினார்' என்று இலகுவாக - முறையாக எழுதவேண்டும்.  இவற்றுள் 'ஏமாறினார்' என்பதை எழுதும்போது கவனம் தேவை.  ஏனெனில், 'ற்' என்ற ஒற்றெழுத்து தவறாக இடையில் புகுந்துவிடுமாயின், அது பிறவினையாகிவிடும்; பிறர் அவரால் ஏமாற்றப்பட்டார் என்று ஆகிவிடும்!

'சுவற்றில் எழுதாதே!': இவ்வாறு எழுதியிருப்பதைப் பலவிடங்களில் நாம் காண்கிறோம்.  'சுவரில் எழுதாதே!' என்றுதான் எழுதப்படல் வேண்டும்.  ஏனெனில், 'சுவர்' என்பதுதான் சரியானது; 'சுவறு' அன்று. 'சுவறு' என்பது, 'உறிஞ்சு', 'வற்றிப்போ', 'காய்ந்துபோ' என்றெல்லாம் வேறு பொருள்களைத் தரும்.  இதனைப் போன்றதுதான் 'தவறு' என்ற சொல்லும்.  'தான் செய்த தவருக்காக வருந்தினார்' என்று எழுதக் கூடாது.  'தவறுக்காக' என்பதே சரியாகும்.  'தவரு' என்பது தவறு.

துவங்கு / துவக்கு:  ஒருவர் அல்லது ஒரு பொருள் தானாகவே தனக்குள்ளே இயங்கத் தொடங்குவது, துவங்குதல் அல்லது தொடங்குதல் எனப்படும். 'அவர் சொற்பொழிவாற்றத் துவங்கினார்' என்று கூறலாம்.  அல்லது, 'ஐ'காரத்தைச் சேர்த்து, 'அவர் சொற்பொழிவைத் துவக்கினார்' என்று கூறலாம்.  'பட்டுப் போன மரம் பருவ மழையால் துளிர்க்கத் தொடங்கிற்று' எனலாம்.  இங்கு, 'தொடக்கிற்று' என்றோ, 'துவக்கிற்று' என்றோ எழுத முடியாது.  'ஆசிரியர் பாடத்தைத் துவக்கி வைத்தார்' என்று கூறலாம்.  ஆனால், 'துவங்கி வைத்தார்' என்று கூற / எழுதக் கூடாது.

இருக்கும்போது / இருந்தபோது:  தொடர் நிகழ் காலத்தில் ( Present continuous ) ஒன்றைக் குறிக்க, 'இருக்கும்போது' என்பதைப் பயன்படுத்தலாம்.  ஆனால், தொடர் கடந்த காலத்தில் ( Past continuous ) ஒன்றைக் குறிக்க, 'இருந்தபோது' என்பதைப் பயன்படுத்தவேண்டும்.  எ.கா.: 'பாடம் நடந்துகொண்டிருக்கும்போது இடையில் பேசக் கூடாது' என்றும், 'நானும் என் நண்பரும் பேசிக்கொண்டிருந்தபோது பேருந்து வந்து நின்றது' என்றும் எழுதவேண்டும்.  இது போன்றே, வரலாற்றில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றை விளக்கி எழுதவேண்டுமாயின், 'நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள்' என்பதை, 'நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள்' என்று எழுதக்கூடாது.  'கட்டடத்தைக் கட்டும்போதே இதைச் செய்திருக்கவேண்டும்' என்பதில் உள்ள 'கட்டும்போதே' என்பதை, 'கட்டியபோதே' என்று மாற்றி எழுதவேண்டும்.  ஏனெனில், இது சென்ற காலச் சொற்றொடர்.  'நான் பார்க்கும்போதே நீ இப்படிச் செய்கிறாயா?' எனும் நிகழ்காலக் கூற்றில், 'பார்க்கும்போதே' என்ற நிகழ்கால வினைப் பயன்பாடு சரியானதே.  இவ்வாறு, நாம் சொற்றொடரில் பயன்படுத்தும் காலத்தைப் பொருத்து வினையும் அமைக்கப்படல் வேண்டும்.  எழுதிப் பழகினால் எல்லாம் சரியாக வரும்.

எந்த:  'எந்த' எனும் சொல் ஒருமையாகும்.  எனவே, அதனைத் தொடர்ந்து வரும் சொல்லும் ஒருமையாகவே அமையவேண்டும்.  ஆங்கிலத்தில்கூட, Any என்ற சொல் singular (ஒருமை)தான்.  Any man, any book, any time என்றெல்லாம் எழுதலாம்.  ஆனால், Any men, any books, any times என்று plural (பன்மை)யாக எழுத அல்லது பேசக் கூடாது. ஆகவே, 'எந்த'வுக்குப் பின்னர் பன்மை வரக் கூடாது.  'எந்த மனிதனும்' என்று எழுதலாம்; பேசலாம்.  ஆனால், 'எந்த மனிதர்களும்' என்பது தவறு.  சமுதாயம் என்பது மனிதர்களின் ஒரு கூட்டமைப்புத்தான் என்றாலும், அது ஒருமைதான்.  எனவே, 'எந்தச் சமுதாயமும்' என்று எழுதுவதும் பேசுவதும் தவறன்று.


-(திருத்தங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)

- அதிரை அஹ்மது 

நல்ல தமிழ் எழுதுவோம்- தொடர்-5

அருகில் மனம் விட்டு 


'நல்ல தமிழ் எழுதுவோம்; நம் மொழியைப் பேணுவோம்' என்ற ஒரே நோக்கத்தில் பதிவு பெற்று வரும் இத்தொடர், எனது ஆய்வையும் பட்டறிவையும் அடிப்படையாகக் கொண்டு அமையும் ஒன்றாகும்.  இதில் சுட்டிக் காட்டப் பெறும் திருத்தங்களுக்கான சான்றுகள் தொல்காப்பியம், நன்னூல் போன்ற மொழியியல் நூல்களில் விரவிக் கிடக்கின்றன.  ஆனால், அச்சான்றுகளையும் எடுத்தெழுதினால், விரையும் நேரச் சூழலில் விளைவு போற்றத் தக்கதாக இருக்காது என்றெண்ணியே, சான்றுகளை விடுத்துச் சரக்குகளை மட்டும் இறக்கி வைக்கின்றேன்.  இனித் தொடர்வோம்...

அருகாமை...!: 'அருகில்' என்று பிழையின்றி எழுதுவதை விடுத்து, நம்மில் பலர், 'அருகாமையில்' என்று பிழைபட எழுதுகின்றனர்!  இவர்களின் நோக்கம், 'கவர்ச்சியாக எழுதுகின்றோம்' என்பதாக இருக்கலாம்.  இது மிகப் பெருந்தவறாகும்.  ஏனெனில், 'அருகில்' எனும் சொல்லில் வேறொரு பொருளைத் தரும் சொல் மறைந்து கிடக்கவில்லை.  ஆனால், 'அருகாமை' என்பதில் மாற்றுப் பொருள் தரும் வேறொரு சொல் பொதிந்துள்ளது!  அதாவது, அருகுதல் = சுருங்குதல், குறைந்து போதல் என்ற வேறுபாடான பொருள் தரும் நிலை உள்ளது.  நெருக்கத்திற்கும் சுருக்கத்திற்கும் குறைதலுக்கும் வேறுபாடு உண்டாகி, 'சுருங்காமை', அல்லது 'குறையாமை' என்ற பொருள்களைத் தருகின்றதல்லவா?  எனவே, அண்மையக் குறிக்க, 'அருகில்' என்று எழுதுவதே சரியானது; 'அருகாமை' தவறானது.
மனமா? மனதா? மனசா?:  உள்ளம் என்பதற்கு 'மனம்' என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றோம்.  'மன மகிழ்ச்சி', 'மன வேதனை', 'மன நிலை' என்றெல்லாம் எழுதுவோம்.  இல்லையா?  ஆனால், நம்மில் பலர் 'மனம்' என்ற சொல்லோடு வேற்றுமை உருபுகளான ஐ-ஆல்-கு-இன்-அது-கண் என்பவற்றைச் சேர்க்கும்போது, 'மனம்' என்பதை 'மனது' என்று மாற்றி, 'மனதை வேதனைப்படுத்தியது' என்றோ, 'மனதால் நம்பினார்' என்றோ, 'மனதுக்கு இதமாயிருந்தது' என்றோ, 'என் மனதின் வேதனை' என்றோ, 'மனதினது நிலையை' என்றோ, ''மனதின்கண் உள்ளதை' என்றோ எழுதுகின்றனர்.  இவை தவறான பயன்பாடுகளாகும்.  இவை முறையே, 'மனத்தை வேதனைப்படுத்தியது', 'மனத்தால் நம்பினார்', 'மனத்துக்கு இதமாயிருந்தது', 'என் மனத்தின் வேதனை', 'மனத்தினது நிலையை', 'மனத்தின்கண் உள்ளதை' என்று முறையாக எழுதப்படல் வேண்டும்.  இதனை ஓர் எளிமையான எடுத்துக்காட்டினால் விளங்கலாம்.  'பணம்' என்பது எல்லாருக்கும் வேண்டிய ஒன்றுதானே?  'பணத்தை', 'பணத்தால்', 'பணத்திற்கு', 'பணத்தின்', 'பணத்தினது' என்றுதானே எழுதுகின்றோம்!  பிறகென்ன, 'மனம்' மட்டும் மாறிவிடுகின்றது?!  'மனம்' என்பதை 'மனசு' என்று கொச்சையாகவும் எழுதக் கூடாது.  இது தெலுங்கு மொழியிலிருந்து வந்த திரிபு என்பதை உணர்க.

விட்டா? விட்டுமா?: 'நரகத்தை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!' என்று எழுதினால், 'நரகத்தை ஏவிவிட்டு அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!' என்பது போல் அனர்த்தமாகிவிடும்.  பிறகு எப்படி எழுதவேண்டும்?  'நரகத்தைவிட்டு அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!' என்று எழுதவேண்டும்.
(திருத்தங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ்...)  
- அதிரை அஹ்மது

Thursday, March 15, 2012

நல்ல தமிழ் எழுதுவோம்- தொடர்-4

ஒன்றும் பலவும் (தொடர்)

வெகுவாகக் காணப்படும் எழுத்துப் பிழைகளுள் குறிப்பிடத் தக்கவை, மறுப்புச் சொற்களாகும்.  நாள், வார, மாத இதழ்களிலும் இணையக் கட்டுரைகளிலும் நம் கண்களை உறுத்தும் பிழைகள் இந்த மறுப்புச் சொற்களில் ஏராளம் என்றால் மிகையாகாது.  சற்றே ஊன்றிப் படியுங்கள்.


அன்று – அல்ல – அல்லன் – அல்லர்:

ஒருமை, பன்மை வேறுபாடுகளுக்குத் தகுந்தவாறு இச்சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது, தமிழ் இலக்கண வரம்பாகும்.  மாறுபாடான தன்மையைச் சுட்டிக் காட்டி மறுத்துரைப்பதற்காக, “இது சரியல்ல” என்றோ, “இது சரியில்லை” என்று எழுதுவது தவறில்லாதது போன்று தெரிகிறது.  ஆனால், தவறு!  எப்படி?

‘இது’ என்பது ஒருமையாகும்.  ‘அல்ல’ என்பது, பன்மையின் மறுப்புச் சொல்லாகும்.  ஒருமையும் பன்மையும் ஒன்றுபடுமா?  எனவே, ‘இது சரியன்று’ என எழுதுதலே சரியாகும் என்பதை அறிக!  ‘அன்று’ என்ற ஒருமை மறுப்புச் சொல்லின் பன்மையே ‘அல்ல’ என்பதாகும்.  இவ்வாறு தவறின்றி எழுதும் பழக்கம் கைவரப் பெறுவது எவ்வாறு?  எழுதிச் செல்லும்போது ஒருமை-பன்மை மீது சற்றே கவனம் வைத்தால் போதும்.  அவ்வளவுதான்.

ஒருவர், “நான் குற்றவாளியில்லை” என்று எழுதினார்.  ஆனால், அவர் தவறிழைத்தவர்!  எதில்?  எழுத்தில்.  ‘அல்ல’, ‘இல்லை’ என்ற சொற்களை ஒருமையுடன் இணைத்து எழுதிய குற்றவாளி ஆகிவிட்டார்!  “நான் குற்றவாளி அல்லன்” என்றே எழுதியிருக்க வேண்டும்.

இது போன்றே, “அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்லர்” என்று எழுதுவதற்குப் பகரமாக, “அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல” என்று எழுதக் கூடாது.  ‘அல்லன்’ என்ற ஒருமையின் பன்மை ‘அல்லர்’ என்பதாகும்.  இவை உயர்தினைக்கே வரும்.  அஃறிணையுடன் வரும் மறுப்புச் சொல் ‘அல்ல’ என்பதாகும்.  “காரணங்கள் அவையல்ல” என்பது போன்று எழுதுதல் வேண்டும்.  

சில – பல – சிலர் – பலர்:  

இவையனைத்தும் பன்மைகளாகும்.  ஆனால், இவை சுட்டும் திணைக்குத் தக்கவாறு மாறுபட்டுப் பயன்படுத்தப்படும்.  ‘சில’ என்பதும் ‘பல’ என்பதும் அஃறிணைக்கே சார்பாக வரும்.  “சில நண்பர்கள்” என்றோ, “பல மக்கள்” என்றோ எழுதுவது தவறாகும்.  இவற்றை, “நண்பர்கள்” என்று மட்டுமோ, “மக்கள்” என்று மட்டுமோ எழுதலாம்.  அல்லது, “நண்பர்கள் பலர்” என்று, அல்லது “மக்கள் பலர்” என்றும் எழுதலாம்.

உண்டு:

பலர் இச்சொல்லை உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாகப் பயன்படுத்துகின்றனர்!  ‘இருக்கின்றது’ என்பதற்கு இணையான மற்றொரு சொல், ‘உண்டு’ என்பதாகும்.  இதனை உயர்திணைக்குப்  பயன்படுத்துவது, பெருந்தவறாகும்.  “ஆடு உண்டு”, “மாடு உண்டு” என்று சொன்னால் தவறில்லை.  “மனிதன் உண்டு” என்று சொன்னால்....?  தவறுதானே?  “மனிதன் உள்ளான்” அல்லது, “மனிதர் உள்ளார்” அல்லது, “மனிதன் இருக்கின்றான்” என்று எழுதுதலே முறையாகும்.      


(திருத்தங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)    

- அதிரை அஹ்மது

நல்ல தமிழ் எழுதுவோம் - தெர்டர்-3

இன்று பத்திரிகைகளிலும் பதிப்பிக்கும் நூல்களிலும் இணையத்திலும் எழுதும் பலர் ஒருமை பன்மையில் தம் கவனத்தைச் செலுத்தாமல் இருப்பதை நாம் காண முடிகின்றது!  கருத்துகளும் தவறின்றி இருக்கவேண்டும்;  அவற்றை எடுத்துரைக்கும் மொழியும் இலக்கணப் பிழையின்றி அமையவேண்டும் என்ற அக்கரையுடன்தான் நாம் இவ்வாறு கூறுகின்றோம்.  அல்லாமல், நமக்கு யாருடனும் காழ்ப்புணர்வோ, பொறாமையோ கிடையாது.  இவ்வடிப்படையில் இத்தொடரை இங்கு நோக்கக் கோருகின்றோம்.

'ஒரு' என்பது ஒருமைக்குப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.  சிலர் ஒருமையில் தொடங்கிப் பன்மையில் முடிப்பதை அவ்வப்போது பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் வலைத் தளங்களிலும் காண்கிறோம்!  ஒருமையில் தொடங்கி, ஒருமையில் முடிப்பதுதான் முறையாகும்.  'ஒரு' என்பது, தனிமையான ஒன்றுக்கும் வரும்;  கூட்டான ஒன்றுக்கும் வரும்.  'ஒரு குடும்பம்', ஒரு கூட்டம்', 'ஒரு சமுதாயம்' என்றெல்லாம் எழுதுவதில் தவறில்லை.  இவற்றைப் பன்மை என நினைத்துக்கொண்டு, 'ஒரு கூட்டம் கூடிவிட்டனர்' என்று எழுதுவது தவறாகும்.  

'ஒரு' என்பது அஃறிணையுடன் இணைந்து பயன்படுத்தப்படுவதும் முறையாகும்.  'ஒரு வீடு', ஒரு பள்ளிவாசல்', 'ஒரு புத்தகம்', 'ஒரு நாள்', 'ஒரு மரம்', 'ஒரு கடை' என்றெல்லாம் எழுதுவதே சரியாகும்.  இந்த 'ஒரு' என்பதை உயர்திணைக்குப் பயன்படுத்தக் கூடாது.  அதாவது, 'ஒரு மனிதன்', 'ஒரு தந்தை', 'ஒரு தம்பி', 'ஒரு தங்கை', 'ஒரு நபி', 'ஒரு தூதர்' என்றெல்லாம் பயன்படுத்துவது கூடாது.  அவ்வாறாயின், இவற்றைத் தவறின்றி எழுதுவது எப்படி?

'ஒரு' என்பதைச் சேர்க்காமல், 'மனிதன்', 'தந்தை', 'தம்பி', 'தங்கை', 'நபி', 'தூதர்' என்று ஒருமையில் எழுதலாம்.  அல்லது, ஒருமையைச் சுட்டித்தான் ஆகவேண்டுமெனில்,  'மனிதன் ஒருவன்', 'தந்தை ஒருவர்', 'தம்பி ஒருவன்', 'தங்கை ஒருத்தி', 'நபி ஒருவர்', 'தூதர் ஒருவர்' என்பன போன்றும் எழுதலாம்.  இன்று மிகப் பெரிய கவிஞர் என்று சமுதாயத்தாரால் மதிக்கப்படும் முனைவர் ஒருவர் ஒரு நூலுக்கு மதிப்புரை எழுதியபோது, 'ஒரு கவிஞர்' என்று எழுதி, என்னை வியப்பில் ஆழ்த்தினார்!  இன்று பரவலாக எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் 'ஒரு நபி' என்றும், 'ஒரு இறைவன்' என்றும், 'ஓர் வேதம்' என்றும், 'ஒரு நண்பன்' என்றும், 'ஒரு தாய்' என்றும் பிழையாக எழுதிவருவதை அன்றாடம் காண முடிகின்றது!  

இத்தொடர்பில் இன்னொன்றையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.  அதாவது, 'ஒரு' அல்லது 'ஓர்' எனும் சொற்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது பலருக்குத் தெரியவில்லை!  இவ்விரண்டு சொற்களும் ஒரே கருத்தைச் சுட்டுவனவே.  எனினும், இவற்றை முறையாக, தவறின்றிப் பயன்படுத்தவேண்டும் அல்லவா?

ஒருமையினை அடுத்து வரும் சொல்லின் முதலெழுத்து உயிரெழுத்தாயின், 'ஒரு' என்பது 'ஓர்' என்று மாறுபடும்.  எடுத்துக்காட்டாக, 'ஓர் உயிர்', ஓர் ஆடு', ஓர் எழுத்து', 'ஓர் ஒளி', 'ஓர் ஆசை' என்பன போன்று.  இவற்றை 'ஒரு உயிர்' என்றோ, 'ஒரு ஆடு' என்றோ, 'ஒரு எழுத்து' என்றோ, 'ஒரு ஒளி' என்றோ, 'ஒரு ஆசை' என்றோ எழுதுவது மொழிப் பிழையாகும்.

சிலர் 'ஓர்' என்பது, எழுத்து நடைக்கு அணி சேர்க்கும் என்று நினைத்துக்கொண்டு, 'ஓர் நாள்', 'ஓர் கருத்து', 'ஓர் காலம்' என்றெல்லாம் எழுதுகின்றனர்!  தவறு.  

ஆனால், 'ஓர்' என்பதற்கு, 'ஒப்பற்ற' என்ற பொருளும் அகராதியில் உண்டு.  அக்கருத்தில் 'ஓர்' என்பதை மாற்றி எழுதுவதில் தவறில்லை.  இதில் இன்னொரு விதிவிலக்கு, மரபுப்பா எழுதிய புலவர்களுக்குண்டு.  இது, அவர்களுக்கு இலக்கண நூல்கள் வழங்கிய உரிமையாகும்.  நாமெல்லாரும் அத்தகைய கவி வல்லார் அல்லரே?
-----------------------------
அதிரை அஹமது


Tuesday, March 13, 2012

நல்ல தமிழ் எழுதுவோம்! தொடர்-2

எனது – உனது – நமது:

எனது, உனது, நமது எனும் சொற்களெல்லாம் என்+அது, உன்+அது, நம்+அது என்று பிரிவுபடும். இவற்றில் ‘அது’ என்பது அஃறிணை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதை வைத்து, உயர்திணையுடன் சேர்ப்பது சாலுமோ? கூடாது. எனவே, ‘எனது தம்பி, உனது தந்தை, நமது நாயகம்’ என்றெல்லாம் எழுதுதல் பிழையாகும் என்பதை இலகுவில் தெரிந்துகொள்க.

அவ்வாறாயின், இவற்றைப் பிழையின்றி எழுதுவது எப்படி? ‘என் தம்பி, உன் தந்தை, நம் நாயகம்’ என்றே எழுத வேண்டும். ஆகவே, எனது, உனது, நமது என்ற சொற்களுக்குப் பின் வரும் சொற்கள் உயர்திணையாக இருக்கக் கூடாது என்பது தெளிவு. ‘எனது புத்தகம், உனது வீடு, நமது ஊர்’ என்பன போன்று அஃறிணையாகவே இருக்க வேண்டும்.

மேலும், ‘அது’ என்பது ஒருமைச் சொல் என்பது நமக்கெல்லாம் தெரியும்தானே? அதனை அடுத்த சொல் பன்மையாக இருக்கலாமா? கூடாது. அதாவது, ‘எனது புத்தகம்’ என்று வரலாம். ஆனால், ‘எனது புத்தகங்கள்’ ‘உனது வீடுகள்’, ‘நமது ஊர்கள்’ என்றெல்லாம் எழுதுவது பிழை. இவற்றிலும் ‘என்’ என்பதை மட்டுமே பயன் படுத்த வேண்டும். அல்லது, ‘உடைய’ என்ற சொல்லைப் பயன் படுத்தலாம். ‘என்னுடைய புத்தகம்’ அல்லது, ‘என்னுடைய புத்தகங்கள்’ என்று பயன்படுத்தலாம்; தவறில்லை.

தான் – தாம் :

‘தான்’ என்பது ஒருமையாகும். ‘தாம்’ என்பதோ பன்மையாகும். இவ்விரண்டையும் எழுதும்போது, ‘நான்தான், அவன்தான், நீதான்’ என்று ஒருமையிலும், ‘அவர்கள்தாம், நாங்கள்தாம், நீங்கள்தாம்’ என்று பன்மையிலும் எழுத வேண்டும். அவ்வாறின்றி, ‘அவர்கள்தான், நாங்கள்தான், நீங்கள்தான்’ என்றெல்லாம் எழுதுதல் பிழையாகும்.

ஆனால், மரியாதையாகக் குறிப்பிடும்போது மட்டும் இவை மாறி வரும். எடுத்துக்காட்டாக: ‘நபியவர்கள்தாம்’ என்பது போன்று.

அதே வேளை, ‘தான்’ அல்லது ‘தாம்’ என்ற அசைச் சொற்களை அவற்றுக்கு முந்திய பெயர்களை விட்டுப் பிரித்து, ‘அவர் தான்’ என்று அல்லது, ‘அவர்கள் தாம்’ என்று எழுதினால் பொருள் மாறுபடுவதை ஆழ்ந்து சிந்தித்தால் அறிந்துகொள்ள முடியும். ‘அவர் தான் சொன்னதை மாற்றிக் கொண்டார்’ என்றோ, ‘அவர்கள் தாம் செய்ததைத் தவறென்று ஏற்றுக்கொண்டார்கள்’ என்றோ எழுதும்போது மெல்லியதாகக் கருத்து மாறுபடுவதைக் காண முடியும்.

அவைகள்:

ஒரு பொருளைப் பற்றிக் குறிப்பிட, ‘அது’ என்கிறோம். அப்பொருளே பலவாக இருந்தால், ‘அவை’ என்போம். இப்பன்மையைப் பலர், ‘அவைகள்’ என்று எழுதுகின்றனர்! இது தவறு. ஏனெனில், பன்மையுடன் இன்னொரு பன்மையா? தேவையில்லை. “அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் எண்ணத் தொடங்கினால், அவைகளை அவர்கள் எண்ண முடியாது” என்ற இறைமறை வசனத்தில் உள்ள ‘அவைகளை’ என்பது ‘அவற்றை’ என்றுதான் அமைய வேண்டும்.

அது, அவை:

‘அது’ என்பது ஒருமைக்கும், ‘அவை’ என்பது பன்மைக்கும் பயன்படுத்தப்படும். ஆனால், எழுத்தாளர்கள், எழுதிச் செல்லும் போக்கில், எதை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்துவிட்டு, முன்னுக்குப் பின் முரணாக எழுதுகின்றனர்! ‘அது....யாவை?’ அல்லது, ‘அவை....என்ன?’ என மாறுபாடாக எழுதுகின்றனர். ‘அது என்ன?’ என்றும், ‘அவை யாவை?’ என்பவையே சரியாகும். “மறுமையின் அடையாளங்கள் என்ன?” என்று பள்ளிப் பாட நூல் ஒன்றில் பதிவாகி இருந்தது! ‘அடையாளங்கள்’ எனும் சொல் பன்மையாகும். எனவே, அதைத் தொடர்ந்து வரும் சொல்லும் ‘யாவை?’ என்றோ, ‘எவை?’ என்றோ, பன்மையாகத்தான் வரவேண்டும்.

எழுத்தாளர்களே! செய்தியாளர்களே! கவிஞர்களே! உங்கள் எழுத்துகளில், இங்கு நான் சுட்டிக் காட்டிய பிழைகள் இருக்கின்றனவா என்று திரும்பிப் பாருங்கள். இருந்தால், திருந்துங்கள்! திருத்துங்கள்! 
 --------------------
அதிரை அஹமது

நல்ல தமிழ் எழுதுவோம்!- தொடர் 1


உயர்வான இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றிய கருத்துகள் சிறப்பான – பிழையில்லாத தமிழ் நடையில் எழுதப்பட்டு வந்தால், நல்ல இலக்கியங்கள் உருவாகும். (இதற்கோர் எடுத்துக்காட்டு, அண்மையில் வெளிவந்த ‘தோழர்கள்’ எனும் நூல்.) அவற்றைக் கொண்டு ‘த அவா’ செய்தால் நிறைந்த பலனைக் காணலாம் என்பது எனது கருத்து.  இதன் விளைவாக உருவானதே இக்கட்டுரைத் தொடர்.
எழுத்தாளர்களுக்குச் சுட்டிக் காட்டித் திருத்தப்பட வேண்டிய மொழிப் பிழைகள் ஏராளம் உள்ளன.  அவற்றுள், என் பார்வையில் பட்ட சிலவற்றை மட்டும் தொகுத்துரைக்க முயல்கின்றேன்.  இத்தொடரில் சுட்டிக் காட்டப்பெறும் எழுத்து, சொல், கருத்துப் பிழைகள் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், தமிழ்ப் புலமையாளர்கள் சிலரின் எழுத்தோவியங்களிலும் இடம்பெற்றிருக்கக் கூடும்!  தக்க சான்றுகளுடன் அவற்றையும் சுட்டிக் காட்டுவேன்.  திருத்திக்கொள்வது நன்று.  வாசகர்களின் கருத்துகள் வரவேற்கத் தக்கவை. 
அல்லாஹ் அவர்களை (!):  ‘அல்லாஹ்’வை அவன் என்று ஒருமையில்தான் அழைக்க வேண்டும்.  அல்லாஹ்வுக்குப் பிறகு பன்மைச் சொல் வந்தால் பொருள் மயக்கம் வர வாய்ப்புண்டு.  எ.கா: ‘அல்லாஹ் அவர்களை மன்னிக்க வேண்டும்’ என்ற சொற்றொடரில் பொருள் மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதை முறையாக எப்படி மாற்றி எழுத வேண்டும்?  ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும்’ என்று மாற்றி எழுதினால் பொருள் மயக்கம் தவிர்க்கப்படும்.  அல்லது, அல்லாஹ் என்ற சொல்லுக்குப் பின்னால் ஒரு காற்புள்ளியை (கமாவை) இட்டுவிட்டாலும் பொருள் மயக்கம் தவிர்க்கப்படும். 
நபிகளார்:   ‘நபிகள் நாயகம்’ என்பது, நபிகள் அனைவருக்கும் நாயகம் (தலைவர்) அல்லது நபிகளின் நாயகம் ஆனவர் என்ற பொருளில் ஆளப்படும் சொற்றொடர் ஆகும்.  இதில் உள்ள ‘கள்’ பன்மை விகுதியை இன்று பலர் (நபிகளார் என்று) ஒருமையிலேயே பயன்படுத்துகின்றனர்!  ‘நபியார்’ என்று மட்டும் குறிப்பிட்டால் போதும்.  அதை விடுத்து, ‘நபிகளார்’ என்று எழுதுவது  தவறு.  அதற்குப் பகரமாக, ‘நபியவர்கள்’ என்று எழுதலாம்.  
------------------------
அதிரை அஹமது
நன்றி-அதிரை எக்ஸ் பிரஸ்                                     

Monday, May 3, 2010

சிறுகதை எழுத

நாகூர் ரூமியின் கட்டுரையை இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. “ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?” இதுதான் அந்தக் கட்டுரையின் தலைப்பு.
எனக்கும் சிறுகதை எழுதவேண்டும் என்று நெடுநாளாக ஆசை. ஆனால் எப்படி தொடங்குவது?, எப்படி தொடர்வது?  எப்படி முடிப்பது? ஒன்றுமே புலப்படவில்லை.
‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி’ என்பார்களே அதுபோல இந்தக் கட்டுரை தற்செயலாக என் கண்ணில் பட்டது. அதிலிருந்த கருத்துக்கள் வேறு என் ஆர்வத்தை அல்வாவை கிண்டுவதுபோல் கிண்டி விட்டிருந்தது.
முதலில் எதையாவது எழுதிப் பழக வேண்டுமாம். அன்றாடம் ஐந்து பக்கங்கள் எழுதுவது என்று முடிவெடுத்து பெர்னார்ட்ஷா எழுதினானாம். எழுதி எழுதிப் பழகினால் பெரிய எழுத்தாளன் ஆகலாம் என்பதை நாகூர் ரூமியின் எழுத்திலிருந்து தோராயமாக புரிந்துக் கொண்டேன்.
என் நண்பர் பாண்டி நாராயணன், தினமும் ஐந்து பக்கங்கள் ராம ஜெயம் எழுதுவார். “இப்போது ராமர் பாலம் தொடர்பாக எங்கு பார்த்தாலும் ஒரே பிரச்சினையாக இருக்கிறது, நீங்களும் உங்களுடைய கருத்துக்களை பத்திரிக்கையில் எழுதுங்களேன்” என்று சொன்னதற்கு கிடந்து பேய் முழி முழிக்கிறார்.
நான் பள்ளியில் படிக்கும்போது சில சமயம் வீட்டுப்பாடம் எழுதாமலிருந்து ஐந்து பக்கங்கள்வரை ‘இம்போஸிஷன்’ தண்டனை பெற்றிருக்கிறேன். அந்த அனுபவம் இப்போது கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தது
எழுதுவதற்கு நேரம் இரவுதான் உகந்ததாம். அமைதி, தொந்தரவின்மை, நிசப்தம் இவையெல்லாம் தங்குதடையின்றி எழுத அவருக்கு உதவியதாம்.  இரவு எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருந்து விட்டு வீட்டில் கணினியின் முன் கம்பீரமாக அமர்ந்தேன்.
ஏதோ ஒரு வீரச்செயலை செய்யத் துணிந்து விட்ட தைரியம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் “உனக்கு இது வேண்டாத வேளை” என்று எதிரணியில் அமர்ந்து மனசாட்சி கூச்சல் குழப்பம் செய்துக் கொண்டிருந்தது. ‘வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக் கொண்டோமோ’ என்ற சந்தேகம் பிறந்து விட்டது. 
உட்காரும்போதே தூக்கம் கண்ணை சொக்கியது. “தூங்காதே தம்பி தூங்காதே” என்று மனதுக்குள் பாடிக்கொண்டே என்னை நானே தூண்டி விட்டுக் கொண்டேன். இந்த விஷயத்தில் தூண்டுதல் மிகவும் முக்கியமாம். அதுவும் அதில் எழுதியிருந்தது.
நம்மை யாரும் எழுதுவதற்கு தூண்டப் போவதில்லை. அது மட்டும் நிச்சயமாக எனக்கு தெரிந்திருந்தது. காரணம், அந்த அளவுக்கு எனக்கு வேண்டப்பட்டவர்களை பேசியே சாகடித்திருக்கிறேன். உண்மை இப்படியிருக்க யாராவது துன்பத்தை விலை கொடுத்து வாங்குவார்களா?
“எதைப்பற்றி எழுதுவது? எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். நான் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். அதில் ஒரு வரி வரும். அது என்னை என்னவோ செய்யும். உடனே ஒரு கதை. ரோட்டில் ஒரு நாய் போகும். அல்லது எதிர்வீட்டில் உள்ளவன் தன் வீட்டுக்குள் கேட்காமல் புகுந்த ஆட்டை கட்டிப்போட்டு கதறக்கதற அடிப்பான். அதைப் பார்க்கவோ அதற்காக பரிந்து பேசவோ நேரிடும். அது என்னவோ செய்யும்.” என்றெல்லாம் பயங்கரமான டிப்ஸை நாகூர் ரூமி வாரி வாரி வழங்கியிருந்தார்.
அடேங்கப்பா… கதைக் கருவை வரவழைப்பதற்கு இப்படியெல்லாம் ஒரு வழி இருப்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டேன்.
வீட்டுக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நின்றேன். மணி பன்னிரண்டு ஆகியிருந்தது. கும்மிருட்டு. நம்முடைய நேரத்துக்கு ஒரு நாயையும் தெருவில் காணவில்லை. “நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” என்று சொல்வார்களே அது இதுதான் போலிருக்கு.
அட.. அது போகட்டும். அடுத்த வீட்டில் யாராவது ஒருத்தன் ஒரு ஆட்டையாவது கட்டிப்போட்டு கதற கதற அடிப்பான் என்று பார்த்தால் அதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை.
தெருவெங்கும் ஒரே நிசப்தம். யாருடைய வீட்டிலும் விளக்கு எரியவில்லை. நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள்.  உம்…கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு என்னைப் போல் சிறுகதை எழுதுகின்ற தலையாய பிரச்சினை  எதுவும்  இல்லை போலும். 
எனக்கு நாகூர் ரூமியின் மீதுதான் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான்” என்பார்களே, மனுஷன் அதுபோல ‘அக்கடா’ன்னு கிடந்த என்னை  உலுக்கி உசுப்பி விட்டு விட்டார்.
தெருவே வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. நடுநிசியில் எதிர்வீட்டு ஜன்னலையே சிறிது நேரம் முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். என் கதைக் கருவுக்கு தீனி கிடைப்பதற்கான வழியையே காணோம்.   
அக்கம் பக்கத்து வீட்டில் யாராவது அவர்களுடைய மனைவியை போட்டு இரண்டு சாத்து சாத்துனாலாவது “அவன்.. அவள்..அது..” என்ற தலைப்பில் சுவராஸ்யமான கதை ஒன்றை இந்நேரம் தொடங்கி இருப்பேன்.
போதாத குறைக்கு எதிரே இருந்த அடுக்குமாடி குடியிருப்பு வாட்ச்மேன் கண்ணில் வேறு பட்டுவிட்டேன். என்னை ஒரு மாதிரியான சந்தேகப் பார்வை பார்த்தான். எனக்கு உடம்பெல்லாம் வெலவெலத்துப் போய்விட்டது.
எதிர் வீட்டில் ஒரு அழகான மாமி வேறு குடியிருந்தார். என்ன நினைத்தானோ பாவி தெரியவில்லை. நம்மை ஒரு ஜொள்ளுப் பார்ட்டியாக முடிவு பண்ணியிருப்பானோ? பயந்துப்போய் என் வீட்டில் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டேன்.
நாளையிலிருந்து என்னைக் கண்டால் சலாம் போடுவனோ என்னவோ அதுவும் தெரியாது.
ஆசை தீர நாகூர் ரூமியை ஒருமுறை மனதார திட்டித் தீர்த்துக் கொண்டேன்.  எல்லாம் இந்த மனுஷனால் வந்த வினை. இப்படி எதையாவது எழுதி விட்டு என்னைப் போன்ற அப்பாவிகளை மாட்டி விடுவதுதான் இவர்கள் வேளை.
மணி ஒன்றாகி விட்டது. தூரத்தில் எங்கிருந்தோ ஆந்தையின் அலறல் வேறு பயமுறுத்திக்கொண்டிருந்தது. கணினியில் வெற்றுப் பக்கத்தை திறந்து வைத்துக்கொண்டு, வெறித்து பார்த்தவாறு புரோட்டா மாவை பிசைவதுபோல் மூளையைப் போட்டு நன்றாக பிசைந்துக் கொண்டேன். கருக்கலைப்புதான் நடந்ததேயொழிய புதிய கரு எதுவுமே உதிக்கவில்லை.
அரும்பு மீசை முளைத்த பருவத்தில் தட்டச்சு கற்றுக் கொண்டது உதவியாக இருந்தது. அந்த டைப் ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டை ‘நர்ஸரி’ என்று சூசகமாகச் சொல்லுவோம். காரணம் அதை நடத்திக் கொண்டிருந்தவர்களுடைய பெயர்கள் முறையே பேபி. குழந்தை, பாப்பா என்பதாவது. அங்கு பயில வந்த இளவட்டங்கள் பெரும்பாலும் ‘சைட்’ அடிப்பதற்காகவே வந்தனர் என்பது வேறு விஷயம்.
asdfg.. asdfg.. என்று அடித்துப் பழகி ஓரளவு வேகமாக அடிக்குமளவுக்கு தட்டச்சு பயிற்சி வளர்ந்திருந்தது. என்ன பிரயோஜனம்? என்ன எழுதுவது என்று தெரியவில்லையே? சட்டியில் இருந்த்தால்தானே அகப்பையில் வரும்?
சாட்டை, சேணம் எல்லாம் வாங்கியாகி விட்டது. கடிவாளமும் தயார். குதிரைதான் இன்னும் வாங்கவில்லை. யோசித்து யோசித்துப் பார்த்து மணி இரண்டாகி விட்டது. தூக்கம் வராமலிருப்பதற்காக ஒரு வெற்றிடக் குடுவையில் (Flask) தேனீரை நிரப்பி வைத்து வயிற்றில் அடிக்கடி எரிப்பொருள் நிரப்பிக் கொண்டேன். 
எனக்குப் பரிச்சயமான பெண்மணி ஒருவர் மல்லிகா பத்ரிநாத்துடைய சமையல் குறிப்பு அடங்கிய புத்தகத்தை அடுப்பங்கறையில் ஒளித்து வைத்துக் கொண்டு பரிட்சைக்கு ‘பிட்’ அடிப்பதைப் போல் பார்த்துப் பார்த்து சமையல் செய்வார். (பாவம் அவர் கணவர்!)
என் நிலைமையும் அப்படி ஆகி விட்டது. நாகூர் ரூமியுடைய புத்திமதிகளை நகல் எடுத்து வைத்துக் கொண்டு அதிலிருந்த குறிப்புகளை அடிக்கடி ஓரக்கண்ணால் ஒத்துப் பார்த்த வண்ணம்  எழுத உட்கார்ந்தேன். கற்பனைக் குதிரை  கிளம்ப அடம்பிடித்துக் கொண்டிருந்தது.
ஆழம் பார்க்காமல் காலை விட்டது என் தவறுதான். இதற்காக வேலைமெனக் கெட்டு “ஈ-கலப்பையை” வேறு பளுக்குறை (Download) செய்து வைத்திருந்தேன். வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் யாராவதுதான் இதனை கண்டுபிடித்திருக்கவேண்டும்.
இங்கிருந்தபடி கலப்பையை இவர்கள் பிடித்திருந்தால் இந்தியாவில் ஒரு மாபெரும் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தி இருக்கலாமோ? வெளிநாட்டில் இருந்துக் கொண்டு இப்போது ஈ-கலப்பையால் இணையதளத்தை உழுதுக் கொண்டிருக்கிறார்களே? அதனாலென்ன? இவர்கள் சர்வதேச அளவில் புரட்சியை செய்துக் கொண்டிருக்கிறார்களே என்று பெருமை அடைந்துக் கொள்ளலாம். 
கணினியில் திறந்து வைத்த வெற்றுப் பக்கம் தன் கன்னித்தன்மையை இழக்கா வண்ணம் இன்னும் கைப்படாத ரோஜாவாகவே இருந்தது. தூக்கத்தை விரட்டியடிக்க மீண்டும் ஒருமுறை தேனீர் அருந்திக் கொண்டேன். மணியைப் பார்த்தேன். நான்கு ஆகி இருந்தது. சிறுகதை என்னிடமிருந்து பிறப்பதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை.
நாகூர் ரூமி அடியில் எழுதியிருந்த ஒரு கருத்து எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. என் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு வழியையும் காண்பித்தது.
“ஒரு சிறுகதைக்கு முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமாம். இன்னும் முடியவில்லை என்று தோன்றுகிற மாதிரிகூட ஒரு முடிவு அமையலாமாம்.”
ஆஹா,,  அற்புதமான ஒரு ஐடியா என் மண்டையிலிருந்து பிரகாசமாக உதித்தது. சிறுகதைதானே பிறக்கவில்லை. அதனாலென்ன? இந்த இரவு நேரத்தில் இவ்வளவு நேரம் நான் பட்ட அவஸ்தையை அப்படியே வடித்தேன். இதுவும் பிரசுரிக்கத்தக்க ஒரு படைப்பாக அல்லவா மாறி விட்டது? இன்னும் முடியவில்லை என்ற மாதிரியே இருந்தது.  அதுதானே தேவை.
கடைசியாக நாகூர் ரூமி சொல்லியிருந்தது இதுதான் :- “சொல்லவரும் விஷயத்தை முடிக்கும் இடத்தில் எழுத்தாளன் இருக்க வேண்டுமாம்”.  நன்றாக அதனை புரிந்துக் கொண்டேன். முடிக்கும் தறுவாயில் மறக்காமல் என் பெயரையும், மின்னஞ்சல் முகவரியையும் முறையே எழுதி விட்டேன்.